<$BlogRSDURL$>

22.1.21

வாய்ப்புகள் தேடு வழிகளை நாடு  

 வாய்ப்புகள் தேடு வழிகளை நாடு 


உள்ளப்பெருங்குழியில் ஓராயிரம் கனவுகள் 

விண்ணையும் தொட்டுவிட பெருந்திட்டங்கள் 

முயன்று பாரடா நீ 

கனவுகள் மெய்ப்பிக்க பிறந்தவனடா !


உன்னுள்ளம் அறிந்த யாவும் 

இவ்வுலகம் உணர  வேண்டும் 

ஊக்கம் கொள்ளடா நீ 

உரிய வாய்ப்பைத் தேடடா !


நட்டவிதை கூட  நாளும் 

மண்ணில் வளரத் துடிக்குமடா  

முட்டிமோதி தான் அது 

தனி வழி அமைக்குமடா !


நீரைத்  தேடிய பயணத்தில் 

அது வெற்றி கொள்ளுமடா 

பின் நிமிர்ந்து நின்று 

எல்லோருக்கும் நிழல் தருமடா !


மழையும்வெயிலும் தாங்கி நிற்கும் 

அது மமதை கொள்ளாதடா 

உறுதியொன்றே  உரமாய் நீ 

கொண்டு உயர்ந்து நில்லடா !


அறிவோடு ஆற்றலும் சேர்ந்தால் 

இங்கு பல்லாயிரம்  வாய்ப்புகளடா 

பேரார்வம் கொண்டு நீ 

உழைத்திட வழிகள் புலப்படுமடா !


உற்ற வழியை இலக்கின்

துணையால் உணர்ந்து கொள்ளடா

கொண்டகனவுகள் யாவும் நீ 

வென்றாய் என்று முரசறையடா !


- ஈரோடு ந.குமரேசன்  








|

This page is powered by Blogger. Isn't yours?